நண்பர்களே!
கானம் கலையகமும், நண்பர்கள் சிலரும் இணைந்து நடாத்திய குறும்படப் போட்டியில் கலந்து கொள்ள சுமார் 24 பேர்கள் விண்ணப்பித்திருந்தபோதும், போட்டிக்கான முடிவுத்திகதி பிற்போடப்பட்டிருந்த போதும், போட்டிக்கு ஆறு பேர்களின் படைப்புக்களே கிடைத்தன.
அவற்றிலும் இரு படைப்புக்கள் போட்டி விதிகளுக்கமைவாக இல்லாத காரணத்தினால் நிரகாரிக்கப்பட்டது. போட்டிக்குக் குறைவான படைப்புக்களே வந்திருந்த போதும், வந்திருந்த படைப்புக்கள் அனைத்தும் சுட்டிய கருப்பொருள்கள் எம்மை அசர வைத்ததென்றே சொல்லவேண்டும்.
இளைஞர்களிடத்தில் இத்துணை சமூக அக்கறை இருக்குமா எனக்கேட்பவர்களை, திணறடிக்கும் வண்ணம் தங்கள் படைப்புக்களைத் தந்திருந்தார்கள். பங்கு பற்றிய அனைவர்க்கும் பாராட்டுக்களும், நன்றிகளும்.
போட்டிக்கு வந்த படைப்புக்கள் குறைவாக இருந்ததாலும், வந்த படைப்புகள் அனைத்தும், ஏறக்குறைய ஒரே தன்மையில் இருந்தமையாலும், போட்டியில் கலந்து கொண்ட நான்கு படைப்புக்களையும் சஹாரப் பூக்கள், வீதியில் இசைத்தாலும், பகை, எல்லைவரை தொட்டுச்செல்ல பரிசுக்குரியதாகத் தெரிவுசெய்துள்ளோம் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். படைப்புக்கள் குறித்த எங்கள் கருத்துக்களை அந்தந்த இணைப்புப் பக்கங்களிலே தந்துள்ளோம்.படைப்புக்களுக்களை பார்வையிடும் நீங்களும் உங்கள் கருத்துக்களையும், வழங்கி, படைப்பாளிகளை உற்சாகப்படுத்த வேண்டுகின்றோம்.
முதல்முறையாக எம்மால் ஒழுங்கு செய்யப்பட்ட போட்டியில், எம் சக்திக்கு அப்பாற்பட்ட தாமதங்களும், தொடர்பாடற் குறைபாடுகளும், இருந்ததை அறிவோம். இனிவரும் காலங்களில் இது குறித்து அக்கறையுடன் செயற்படுவோம் என்பதை அறியத்தருகின்றோம். இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதோடு, படைப்பாளிகளுக்கான கெளரவப் பரிசில்கள், காலக்கிரமத்தில் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை அறியத் தருகின்றோம். உங்கள் ஆர்வத்துக்கு நன்றி
குறும்பட ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு
குறும்படத்துறை சார்ந்து மேலும் பலர் ஆர்வம் காட்டி வருவதால், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கொருமுறை, புதிய தலைப்புக்களில் இப்போட்டியினைத் தொடர்ந்து நடாத்த எண்ணியுள்ளோம். இதற்கான அறிவிப்பு வெகுவிரைவில் அறியத்தரப்படும்
- கானம் கலையக நண்பர்கள் -
